ஒரே வாரத்தில் ஏன் கேஸ் போட்டீங்க.. ரஜினிக்கு 'நறுக்கு தெறிக்க' சரமாரி கேள்வி எழுப்பிய ஹைகோர்ட்
சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வரி செலுத்த முடியாது என்று கூறி, ரஜினிகாந்த் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஹைகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸ் எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஹைகோர்ட்டில் குட்டுப்பட்ட ரஜினிகாந்த்.. இதில் மட்டும் இருந்தா போதுமா.. எல்லாத்திலும் இருக்கலாமே!
வாடகை வரவில்லை
அந்த மனுவில், கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளதாகவும் அந்த மனுவில் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.
அபராதம் விதிக்க தடை
அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளதாகவும், மனுவில் தெரிவித்துள்ளார். மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக தன் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருக்கிறார்.
நீதிமன்ற நேரம்
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த், முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா என கேள்வி எழுப்பினார்
எப்படி வழக்கு தொடருவீர்கள்?
மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் எனவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என கேள்வி எழுப்பினர். நடிவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா எனவும், நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா என்றும் கேள்வி எழுப்பினர்.
எச்சரிக்கை
இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்துள்ளார்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி
எத்தனையோ திருமண மண்டபங்கள் வாடகை வசூல் இல்லாமல் வரி செலுத்தும் நிலையில், பெரும் அந்தஸ்திலுள்ள ஒருவர், பிற துறைகளில் நல்ல வருவாய் பெறும் ஒருவர், அரசுக்கு வரி செலுத்த தயங்கி அவசரமாக வழக்கு போட்டது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரி தமிழக நலனுக்குத்தானே போகும்.. அதைக் கூட ரஜினிகாந்த் செலுத்தாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணத்தை செலவிட தயாராகிவிட்டாரே என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்வதை பார்க்க முடிகிறது.