நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததி பாட்டிலில்தான் தண்ணீரை பார்க்க முடியும்: ஹைகோர்ட்!
சென்னை: தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் தண்ணீரை பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பம் ஏற்படுத்த கோரி ஜிவிஆர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஃபனி புயல் எதிரொலி.. புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
அறிக்கை தாக்கல்
அப்போது தமிழக அரசு தரப்பில் பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு மற்றும் அடையாறு ஆகியவற்றை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதற்கான செலவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு குழு
தமிழக அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்ததுடன் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர். அவர்கள் கூறியதாவது, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
3 மாதத்திற்கு ஒருமுறை
அடுத்த 6 மாதங்களுக்குள் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை கண்டறிந்து அதன்மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த பணிகளை 3 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாட்டிலில்தான் பார்க்க வேண்டும்
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில்களில் தான் நீரை பார்க்க நேரிடும். இலவசங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை தடுக்க அணைகளை கட்டலாம்.
வரப்பு உயர நீர் உயரும்
இயற்கையின் வரப்பிரசாதமான நீரை வீணாக்கினால் தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை போல் தமிழகம் மாறும் நிலை உருவாகும். வரப்பு உயர நீர் உயரும் என்ற ஔவையாரின் பாடலை ஆட்சியாளர்கள் தவறாக புரிந்துள்ளனர் என்றும் நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்