ஓபிஎஸ் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று.. அதிமுக வங்கி கணக்குகள் கையாள வாய்ப்பா? தீர்ப்பு கூறுவது என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக கிடைத்துள்ள இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக வரவு செலவு விபரம் மற்றும் வங்கி கணக்குகளை ஓ பன்னீர் செல்வம் கையாள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பொதுக்கு மூலம் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானார்.
ஜூன் மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இது கைக்கூடாத நிலையில் ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த பரபரப்பு! அதிமுக தலைமை அலுவலகம் சாவி வழக்கு.. ஓபிஎஸ் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை!
பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு
இந்த தேர்வு செல்லாது என ஓ பன்னீர் செல்வம் கூறினார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கம் செய்தார். இதற்கிடையே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பபட்டன். வைரமுத்து என்பவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். ஜூலை 11ல் கூடிய அதிமுக பொதுக்குழு செல்லாது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் சேர்ந்து கூட்ட வேண்டும். இதனால் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு
இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து தான் செயற்குழு, பொதுக்குழு கூட்ட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் மூலம் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளாராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன், பொருளாளராக தேர்வான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் தேர்வு செல்லாததாக மாறியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் நிர்வாகிகள் நீக்க நடவடிக்கையும் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி கணக்கு விவகாரம்
அதிமுகவை பொறுத்தமட்டில் கட்சியின் வரவு செலவு விவகாரங்கள், வங்கி கணக்குகளை பொருளாளர் தான் நிர்வகிப்பார். அதன்படி பொருளாளர் என்ற அடிப்படையில் ஓ பன்னீர் செல்வம் நிர்வகித்து வந்த நிலையில் தான் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்து வங்கிகளுக்கும் கடிதம் எழுதினார். இதற்கு ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவரும் வங்கிகளுக்கு கடிதம் எழுதினார். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகின.
ஓபிஎஸ் வசம் செல்கிறதா?
இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால் அதிமுக வரவு செலவு விவகாரங்கள் மற்றுமு் வங்கி கணக்குகளை நிர்வகிப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செல்லாது. இதனால் இந்த விஷயத்தில் ஓ பன்னீர் செல்வம் கை ஓங்கி உள்ளது. அதாவது நீதிமன்றம் கூறியபடி ஜூன் 23க்கும் முந்தைய நிலை தொடர வேண்டும் என்பதால் கட்சியின் பொருளாளர் என்பது ஓ பன்னீர் செல்வமாக இருப்பார். இதனால் அதிமுகவின் வரவு செலவு, வங்கி கணக்கு விஷயங்களை ஓ பன்னீர் செல்வம் கவனிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.