ஹைகோர்ட்டில் குட்டுப்பட்ட ரஜினிகாந்த்.. இதில் மட்டும் இருந்தா போதுமா.. எல்லாத்திலும் இருக்கலாமே!
சென்னை: "தனக்கு வந்தால் மட்டும் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று ராகவேந்திரா திருமண மண்டப விவகாரத்தில் குட்டுப்பட்ட ரஜினிகாந்த் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..
ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10 ம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் லாக்டவுன் பொதுமுடக்கம் காரணமாக, நிகழ்ச்சிகள் ஏதும் மண்டபத்தில் நடக்கவில்லை என்றும், இந்த நோட்டீஸ் வைத்து சொத்துவரிக்கு விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் மனு மூலம் தெரிவித்திருந்தார்.
விசாரணை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி, நோட்டீஸ் அனுப்பப்பட்ட பத்து நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்களே? ஏன் அவசர அவசரமாக கோர்ட்டிற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்... அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். ரஜினிகாந்த் தரப்பிலும் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
வீட்டு வாடகை
கோர்ட்டை ரஜினி அணுகிய விதம்குறித்துதான் மக்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.. கடந்த 6 மாதமாகவே லாக்டவுனில் மக்கள் சிக்கி கொண்டுள்ளனர்.. எத்தனையோ பேர் வீட்டு வாடகை தர முடியாமல் தவித்து வருகின்றனர்.. ஒருகட்டத்தில் வாடகை கேட்ட ஹவுஸ் ஓனரை, குடியிருப்போரே அரிவாளால் வெட்டி கொன்ற பல சம்பவங்கள் நடந்தன.. அப்படி இருந்தாலும் கூட பலர் கஷ்டப்பட்டு வாடகை தருகின்றனர். செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் உள்ளனர். யாருமே கோர்ட்டை நாடி என்னால் வீட்டு வாடகை கட்ட முடியாது என்றோ, வருமானம் இல்லை வரி கட்ட முடியாது என்றோ கூறி நிவாரணம் கேட்கவில்லை.
ஹைகோர்ட்
அப்படி இருக்கும்போது, ரஜினிகாந்த் முறையாக மாநகராட்சியை அணுகாமல், நேரடியாக ஹைகோர்ட்டை நாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏன் இந்த அவசரம் என்று நீதிபதியைப் போலவே மக்களும் கூட கேட்கின்றனர். இந்த கொரோனா காலத்தில் இவர் மண்டபம் மட்டும்தான் மூடியிருந்ததா? மண்டபத்தை மட்டுமே நம்பி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேரின் மண்டபங்களும்தான் மூடியிருந்தது? ஆனால் அவர்கள் யாருமே இதுவரை கோர்ட்டை நாடியதாக தெரியவில்லை.
நீதிபதி
ஆனால் ரஜினிகாந்த் முறையாக மாநகராட்சியிடம் முறையிட்டு நிவாரணம் பெற முயலாமல் நேரடியாக கோர்ட்டுக்கு வந்தது, மாநகராட்சியை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. நீதிபதியின் கண்டனமும் கூட அதையேதான் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.மக்களும் கூட அதையேதான் கேட்கிறார்கள். இப்படித்தான், அவரது மனைவி லதா ரஜினி, மாநகராட்சி இடத்தில் கடை வைத்துக்கொண்டு, அதை காலி செய்யவும், வாடகை செலுத்தவும் மறுத்ததையும், அதற்கு பணமதிப்பிழப்பை ஒரு காரணமாக சொன்னதையும் அதையடுத்து கோர்ட் அவருக்கு நோஸ்கட் தந்ததையும் இன்னும் மறக்க முடியாத நிலையில், ரஜினியின் இந்த விவகாரம் சலசலப்பை தந்துள்ளது.
அதிக சம்பளம்
ரஜினிகாந்த் நிச்சயம் இருக்கும் நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்குகிறார். ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்குப் பிறகு பெரிய சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிதான் என்றும் சொல்கிறார்கள். விரைவில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரப் போவதாகவும் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர், இப்படி மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்காமல் அதிகாரிகளை, மாநகராட்சி நிர்வாகத்தை புறம் தள்ளி விட்டு நேரடியாக ஹைகோர்ட்டுக்கு வந்தது ஆரோக்கியமான செயலா என்று மக்கள் கேட்கிறார்கள். டிவிட்டரில் இதுதான் இப்போது பெரும் விவாதமாகியுள்ளது.
சொத்து வரி
கஷ்டப்பட்டாலும் வரி கட்ட வேண்டும், வாடகை கட்ட வேண்டும் என்று சாமானிய மக்களே கடன் உடனை வாங்கியாவது எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும்போது ரஜினிகாந்ததும் அதேபோல செய்ய முயலாமல் வரிவிலக்கு கேட்டிருப்பது மக்களிடையே அவரை கேலிப் பொருளாக்கி விட்டது. இதுவரைக்கும் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்குத்தான் அவர் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்காக என்று இறங்கி எதையும் செய்ததில்லை. இப்போது .. அரசுக்கு செலுத்த வேண்டிய தன்னுடைய சொத்துவரியையும் செலுத்த மறுத்தால் எப்படி? என்றும் மக்கள் கேட்கிறார்கள்.
ஹத்ராஸ்
தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய முக்கிய சம்பவம் நடந்தாலும் அவ்வவு சீக்கிரத்தில் வாய் திறக்காத ரஜினி, ஹத்ராஸ் சம்பவம் போல எத்தனையோ கொடூரங்களுக்குகூட வாய் திறந்து கண்டனம் சொல்லாத ரஜினி, தன்னை பாதிக்கும் விஷயம் என்றால் மட்டும் கோர்ட்டுக்கு, அடித்து பிடித்து கொண்டு வருவதும் அவர் குறித்த முரண்பாடான தோற்றத்தையே தொடர்ந்து உருவாக்குகிறது. சொத்து வரி என்பது நிச்சயம் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம்தான்.. சந்தேகமே இல்லை.. அதேசமயம், மக்களுக்காகவும் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் அவர் இதே போன்ற வேகத்தைக் காட்டினால் மக்களின் மனதில் கொஞ்சமாவது இடம் கிடைக்க வாய்ப்புண்டு.