சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஹைகோர்ட் அனுமதி
சென்னை: சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பிய சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், அவரது கணவர் சாந்தகுமாரை கடந்த 2001-ஆம் ஆண்டு கடத்தி கொன்றார்.
இந்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவர் கடந்த 9-ஆம் தேதி சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும்படி ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்டு ஒரு நாள் கூட சிறையில் இல்லாமல் நேரடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சி சிசிடிவி.. சென்ட்ரல் ஸ்டேஷனில் தூங்கி கொண்டிருந்த 3 வயது குழந்தையை கடத்திய நபர்
அங்கு அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும் அவருக்கு செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என அவரது மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க சென்னை ஹைகோர்ட் அனுமதித்துள்ளது.