நக்கீரன் கோபாலை விடுவித்ததற்கு பாராட்டுகள்… எழும்பூர் நீதிபதிக்கு சபாஷ் சொன்ன ஹைகோர்ட்
சென்னை:நக்கீரன் கோபாலை விடுவித்த நீதிபதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பாக நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரை வெளியாகி வந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், ஆளுநர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலை திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 9ம் தேதி நிகழ்ந்த்து.
அவரது கைது நடவடிக்கை தமிழக பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை முடிக்கப்பட்டு அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர். அப்போது நீதித்துறை நடுவர் முன் நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதாடினார்.
'தி இந்து' குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் ஊடகத் தரப்பாக ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத், பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று மறுத்தார். இதை அடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் எழும்பூர் கோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தது. அது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டார். எழும்பூர் நீதிபதியின் செயல் சரியே என்று கருத்து தெரிவித்த அவர், நக்கீரன் கோபாலை சிறைக்காவலுக்கு அனுப்ப மறுத்த மாஜிஸ்திரேட்டுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.