பாத்திமா மரணத்தால் வேதனையில் இருக்கிறோம்.. எங்களை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்.. சென்னை ஐஐடி
தவறான தகவலை பரப்ப வேண்டாம் என சென்னை ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது
Recommended Video
சென்னை: மாணவி பாத்திமா தற்கொலை பற்றி சோஷியல் மீடியாவில் வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை முடியும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் ஐஐடி நிர்வாகம் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாஸ்டல் ரூமில் பாத்திமா இறந்த சம்பவம் கேரள- தமிழக மக்களிடையே பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. கேரள அரசின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளது.
மாணவி தற்கொலை சம்பந்தமாக ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது- இந்த வழக்கு விசாரணை காவல்துறையிடம் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
என் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்சன் பத்மநாபனை விடக்கூடாது.. பாத்திமா தந்தை ஆவேசம்
தந்தை வேதனை
இதனிடையே, மகள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை தேவை என பாத்திமாவின் தந்தை தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போதும் மகளின் மரணத்துக்கு காரணமான சுதர்சன பத்மனாபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மகளின் மரணத்திற்காக சென்னை ஐஐடி நிர்வாகம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை, இது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
அறிக்கை
இந்நிலையில், சென்னை ஐஐடி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சிறந்த மாணவி பாத்திமாவின் தற்கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ஒரு இளம் மாணவியின் மரணத்தால் நாங்கள் இன்னும் துயரத்தில் இருக்கிறோம். மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது.
அவதூறு வேண்டாம்
மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை முடியும் வரை தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். சென்னை ஐஐடி நிர்வாகம் தொடர்பாக வதந்திகளை சமூக ஊடகங்களிலும் அவதூறாக பரப்ப வேண்டாம். ஐஐடி, ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் விசாரித்து தீர்ப்பளிப்பது வேதனை தருகிறது. மாணவி மரணம் குறித்து ஐஐடி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததுமே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அவப்பெயர்
சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. ஐஐடி சென்னையில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் மனநலன் மற்றும் முழு உடல் நலனைப் பேண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.