தீவிரமடைகிறது விசாரணை.. பாத்திமாவின் தாயார், தங்கையிடமும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு
பாத்திமா மரணம் குறித்து விசாரிக்க தனிப்படை கேரளா விரைகிறது
சென்னை: பாத்திமாவின் அம்மா, மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படை ஒன்று கேரளா விரைகிறது..
சென்னையில் பாத்திமாவின் அப்பா அப்துல் லத்தீப், தமிழக முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி ஆகியோரை சந்தித்து, முறைப்படி விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழக டிஜிபி ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணையும் தீவிரமாகி வருகிறது.
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில்தான் தங்கி உள்ள இவரிடம் சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலீனா ஆகியோர் அப்துல் லத்தீப்பிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை நேரில் அழைத்து மீண்டும் விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
பாத்திமா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற 2 ஐஐடி மாணவர்கள்
தற்கொலை
அதன்படி, பாத்திமா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக தனது செல்போனில் தெரிவித்திருந்த தகவலின்படி ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமசந்திர காரா, மெலின்ஸ் பிராமே ஆகிய 3 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர். அதன்படி மூன்று பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தற்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.
விசாரணை
இதனிடையே, பாத்திமா லத்தீபின் தாயாரிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸ் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கேரளா சென்று பாத்திமாவின் அம்மா, அவரது சகோதரியிடமும் போலீஸ் விசாரிக்க உள்ளது.
தகவல்கள்
"தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிதான் அனுப்பி வைத்தோம், இப்படி ஆயிடுச்சே" என்று கண்ணீர் சிந்தி, பாத்திமா பற்றின பல உருக்கமான தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டவர் பாத்திமாவின் தாயார். இப்போது போலீசார் விசாரணையின்போதும், மகளின் குமுறல்களை வெளிப்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்படை
அதேபோல, விடுமுறைகளில் பாத்திமா கேரளா செல்லும்போது, தன் தோழிகளை, உறவினர்களை சந்தித்து பேசியிருக்கலாம் என்பதால், அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளது போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படை கேரளா விரைவதாக தெரிகிறது.
செல்போன்
ஒரு பக்கம் பேராசிரியர்களிடம் விசாரணை, மற்றொரு பக்கம் பாத்திமாவின் பெற்றோரிடம் விசாரணை என போலீசாரின் தீவிரம் வேகமெடுக்கிறது. இப்போது இந்த மரணத்தில், முக்கிய ஆதாரமான பாத்திமாவின் செல்போனின் ஆய்வக முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் காத்திருக்கிறது!