பாத்திமா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற 2 ஐஐடி மாணவர்கள்
ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
சென்னை: பாத்திமா மரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரி, சென்னை ஐஐடி வளாக வாசலில்.. 2 மாணவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் கோரிக்கை குறித்து விளக்க அறிக்கையினை தர ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளதை அடுத்து, இந்த உண்ணாவிரதம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
பாத்திமாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்கள் கேரளாவில் வலுத்து வருகின்றன.. அதன் தாக்கம் தமிழகத்திலும் தொத்திக் கொண்டு தீவிரமாகி வருகிறது.
இந்த விவகாரம் பெரிதாக எழ தொடங்கியபோதே, சோஷியல் மீடியாவில் 'ஜஸ்டிஸ் ஃபார் பாத்திமா' என்ற பெயரில் பதிவுகளையும் பொதுமக்கள் போட்டு வருகிறார்கள்.
பெண்ணின் கன்னத்தில் அறைந்த அர்ச்சகர்.. தலைமறைவாகி தப்பி ஓட்டம்.. 2 மாதம் பூசை செய்ய தடை!
ஐஐடி நிர்வாகம்
அந்த சமயத்தில்தான் ஐஐடி நிர்வாகம் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "விசாரணைக்கு எல்லா விதமான ஒத்துழைப்பு தருகிறோம்.. நிர்வாகத்தை பற்றி சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துக்கள் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது.. தவறான தகவலை பதிவிட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டது.
தீர்வு
எனினும், மாணவர்கள் தரப்பினை சமாதானம் செய்ய முடியவில்லை. தமிழக அரசின் போலீஸ் விசாரணை ஒரு பக்கம் மிகமிக துரிதமாக நடந்து வந்தாலும், கேரள-தமிழக மாணவர்களிடையே ஐஐடி பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளனர்.
உண்ணாவிரதம்
இதனிடையே, 2 மாணவர்கள் சென்னை ஐஐடி நுழைவாயில் முன்பு உட்கார்ந்து நேற்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மட்டுமில்லை.. மாணவர்களின் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் இந்த மாணவர்கள் கேட்டுக் கொண்டு உண்ணாவிரதத்தை கையில் எடுத்ததால் ஐஐடி வளாகமே பரபரத்தது. பாத்திமா மரணம் குறித்து விசாரிக்க குழு ஒன்றையும் அமைக்க வேண்டும் என்று இந்த மாணவர்கள் கோரிக்கை கேட்டுக் கொண்டனர்.
வாபஸ்
இந்நிலையில், 2 மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் கோரிக்கை குறித்து விளக்க அறிக்கை தர நிர்வாக தரப்பில் கூறியதாகவும், இதன் காரணமாகவே, 2 மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.