நண்பர்களிடம் பந்தயம்.. கொரோனா இருக்குனு பொய் கூறிய ஐஐடி மாணவி.. டோஸ் விட்ட சுகாதார துறை அதிகாரிகள்
சென்னை: நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பொய் கூறி சென்னை- கோவை பேருந்தை நடுரோட்டில் ஐஐடி ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. அதில் ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி பயணம் செய்தார்.
அவர் திடீரென ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறினார். ஆனால் பேருந்து டிரைவரோ பேருந்தை அதன் நிறுத்தத்தை தவிர வேறு எங்கும் நிறுத்த முடியாது என்றார்.
சுகாதாரத் துறை அதிகாரிகள்
இதையடுத்து அந்த மாணவி, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் எனக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்று கூறினார். மேலும் அந்த பேருந்தில் அவர் இருமியவுடன் மற்ற பயணிகள் அச்சம் கொண்டனர். உடனே கொரோனா பாதிப்பு அவசர உதவி எண்ணிக்கு அழைத்தனர். இதையடுத்து மேல்மருவத்தூரில் பேருந்தை நிறுத்தி வைத்துவிட்டு காத்திருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
வேறு வழியில்லை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பேருந்தின் பின்னால் ஒரு காரில் இவரது நண்பர்கள் வந்து கொண்டிருந்ததாகவும் அந்த காரில் ஏறுவதற்கு தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
பேருந்து
மேலும் நண்பர்களும் பிராங்க் செய்ய துணிவிருக்கிறதா என கேட்டனர். இதனால் நானும் ஒப்புக் கொண்டு எனக்கு கொரேனா இருப்பதாக பொய் கூறியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அந்த பெண், நண்பர்களின் காரில் சென்றுவிட்டார். பின்னர் பேருந்தை கிருமிநாசினியால் சுத்தப்படுத்திவிட்டு பயணிகளுக்கும் கிருமி நாசினி வழங்கினர். எனினும் அந்த பேருந்தில் செல்ல பயணிகள் மறுத்துவிட்டனர்.
மன்னிப்பு
இதையடுத்து காவல் துறையும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளும் தனியார் பஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய அந்த பெண் கொடுத்த முகவரியை தொடர்பு கொண்டு அந்த பெண்ணிடம் அதிகாரிகள் பேசினர். அப்போது அவரை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தினர். அதற்கு அந்த பெண் வர மறுத்ததால் அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண், டிஎம்எஸ் அலுவலகத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டார். அவருக்கு கடும் எச்சரிக்கை அளித்த அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.