கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலார்ட்
சென்னை: கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்றும். புதுச்சேரி, விழுப்புரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் .திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் நேற்று அளித்த பேட்டியில், இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழகத்தில் ஜனவரி 12, 13-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை
தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (இன்று) மிதமான மழை பெய்யலாம். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.. மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் மழை
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (ஜன.13) லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும். ஜன.14, 15: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையும் நிலவும் என்று கூறியிருந்தார்.
அடுத்த சில மணி நேரம்
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்றும். புதுச்சேரி, விழுப்புரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எங்கு அதிக மழை
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடலூா் மாவட்டம் புவனகிரியில் 110 மி.மீ., பரங்கிப்பேட்டையில் 90 மி.மீ., ராமநாதபுரம், திருவாரூா் மாவட்டம் குடவாசலில் தலா 60 மி.மீ., ராமேஸ்வரம், நாகப்பட்டினம் கொள்ளிடத்தில் தலா 50 மி.மீ. மழை பெய்துள்ளது.