அப்பப்ப மழை... மழை சலிக்காம இருக்க காற்று.. கூடவே மஞ்சள் வெயில்... அடடே சென்னை!
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே ரம்மியமான வானிலை நிலவுகிறது. அதிகாலையில் சில்லென்று பெய்த மழை, அதனைத் தொடர்ந்து பேய்க்காற்று, அப்பப்ப மஞ்சள் வெயில் என்று செம கிளைமேட்டாக இருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதமே முடியப் போகும் நிலையிலும் தொடங்காமல் இருந்தது. டிட்லி மற்றும் லூபான் புயல் காரணமாக பருவமழை தள்ளிப் போவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் சுழற்சியால் வடகிழக்குப் பருவக்காற்று வீசத்தொடங்கி நவம்பர் 1 முதல் பருவமழையை கொண்டு வரும் என்று வானிலை மையம் கூறி இருக்கிறது. ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் பெய்த மழையின் அளவு பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஜில் என்ற பனிக்காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. எனவே பருவமழை நினைத்த அளவில் பெய்யுமா என்ற சந்தேகம் இருந்தது.
இது சும்மா டிரெய்லர்தான்... மெயின் பிக்சர பாப்பீங்க.. எல்லாம் அதுக்கான அறிகுறிதான்!
வானிலையில் வித்தியாசம்
இன்று காலை முதலே சென்னையில் வித்தியாசமான வானிலை நிலவுகிறது. காலை 7 மணியான போதும் மழை மேகங்கள் சூழ்ந்து கொண்டு கும்மென்றே இருந்தது. காலை வேளையில் சென்னையில் சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது.
புறநகர்களில் கனமழை
கரையான்சாவடி, குமரன் சாவடி, மாங்காடு, குன்றத்தூர், வேலப்பன்சாவடி, திருவேற்காடு, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிவிட்டதோ என்று நினைப்பதற்குள் மஞ்சள் வெயில் தலைகாட்டியது.
தலைகாட்டி மறையும் வெயில்
வெயிலோடு அன்றாட வேலைகளைத் தொடங்கினால் சிறிது நேரத்திலேயே பேய்க்காற்று கம்பியில் காயப்போட்டிருக்கும் துணிகளை பக்கத்து வீட்டிற்கு கொண்டு செல்கிறது. மற்றொரு புறம் சரசர சாரக்காற்றால் வாகன ஓட்டிகளுக்கும் சில சிரமங்கள் ஏற்பட்டது.
ட்ரெய்லரே சூப்பர்
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ராமாபுரம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பேய்க்காற்று, மஞ்சள் வெயில், மழை என்று 3 பருவத்தை ஒரே நாளில் உணரும் இதமான வானிலை நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழை 2 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ட்ரெய்லரே படு சூப்பராக இருக்கிறது போங்க.
{document1}