சென்னையில் இன்று 'நிழல் இல்லை' நிஜம் மட்டும் தான்.. அபூர்வமான பூஜ்ய நிழல் நாளை ரசித்த மக்கள்
சென்னை: சென்னையில் இன்று நிழல் இல்லாத நாள் அதாவது பூஜ்ய நிழல் நாள் என்ற அபூர்வம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாக, சூரியனால் உருவாகும் ஒரு பொருளுடைய நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளமாக இருக்கும். இந்த நிழலானது வெயில் அதிகமாக ,அதிகமாக நீளத்தில் குறைந்து கொண்டே வரும். உச்சி வேளையில் மிகக்குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
ஆனால், ஓர் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில் கூட பார்க்க முடியாது. அந்த நாளைத்தான் நிழல் காண முடியாத நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என அழைக்கிறார்கள்.
48 மணி நேரத்தில் பொங்க போகிறது கடல்.. 28ம் தேதி முதல் மழை பெய்யும்- வானிலை மையம்
நீண்ட பகல்
நம் இருக்கும் பூமி, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனை,நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமியின் அச்சானது சூரியனைச் சார்ந்து 23.45 டிகிரி கோணத்தில் சாய்வாக சுற்றுகிறது. இந்த சுற்றுப் பாதையின் போது பூமியானது வருடத்தின் இரண்டு நாட்களில் தன் வட மற்றும் தென்மண்டலப் பகுதிகளில் நீண்ட பகலையும் நீண்ட இரவும் ஏற்படும்.
நிழல் இல்லா நாள்
அப்படி ஒரு பூஜ்ய நிழல் நாள் தான் இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் 12:07 மணிக்கும், அதே போல் கர்நாடகவில் பெங்களூரில் 12:17 க்கும், மங்களூரில் 12:27 க்கும் இந்த பூஜ்ஜிய நிழல் நாள் நிகழ்வு நடந்துள்ளது.
பருவநிலை மாற்றம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ய நிழல் நாளை காண இன்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபூர்வ நிகழ்வு குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமும் விஞ்ஞானிகள் அளித்தனர். வருடத்துக்கு இருமுறை மட்டுமே நடக்கும் இந்த நிழல்லா நாள் காரணமாக பூமியின் பருவநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆர்வத்துடன் சோதனை
இதனிடையே பல இடங்களில் மாணவர்கள் இன்று நிழல் இல்லாத நாள் ஏற்படும் எனபதை அறிந்து அதனை சில பொருட்களை வைத்து ஆர்வத்துடன் சோதனை செய்து பார்த்தனர்.