2 வாரங்களுக்கு மழையின் தீவிரம்.. கேரளா வெள்ள பெருக்குக்கு காரணம் இதுதான்.. இந்திய வானிலை ஆய்வு தகவல்
கேரளா வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்குத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தெற்குத் தீபகற்ப பகுதிகளில் மழையின் தீவிரம் இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது.. இப்போதே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது..
வடமாநிலங்களில் இயற்கை சீற்றம் ஏற்படும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நேபாளம், உத்தரகாண்ட், டெல்லி, போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்..
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
கோட்டயம்
கேரளாவில் நிலைமை மேலும் மோசமாக இருக்கிறது. பல்வேறு பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையினால் கடும் பாதிப்பை எதிர்கொண்டது.. இந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது... பலர் உயிரிழந்தனர். சிலர் மாயமாகி உள்ளனர். இதுவரை அந்த மாநிலத்தில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்... இப்போதைக்கு மழை ஓரளவு குறைந்துள்ளது.. எனவே, மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன...
கனமழை
இதனிடையே, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் 25ம் தேதி வரைக்கும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பில், "24ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 25ம் தேதியன்று தமிழ்நாடு,புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பருவக்காற்று
நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26ம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
சூறைக்காற்று
தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டிருந்தது.
Recommended Video
திடீர் வெள்ளம்
இந்நிலையில், கேரளாவின் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான் காரணம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... அத்துடன் வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பாக இன்னொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்குத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தெற்குத் தீபகற்ப பகுதிகளில் மழையின் தீவிரம் இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது..
வானிலை
இதுகுறித்த அறிக்கையையும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. அரபிக் கடலில் கேரளத்தை ஒட்டி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வும், தீவிரமுமே கேரளத்தில் கனமழை பெய்ததற்கும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கும் காரணம் என்றும் அந்த அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பினையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.