சென்னையில் பயங்கரம்.. மரம் விழுந்து காரில் சென்ற வங்கி பெண் மேலாளர் பலி.. கால்வாய் பணி தான் காரணமா?
சென்னை: சென்னையில் திடீரென்று கார் மீது மரம் விழுந்ததில் வங்கியின் பெண் மேலாளர் பலியாகி உள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கால்வாய் பணியால் மண்சரிந்து மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை கேகே நகரில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இன்று வங்கி பெண் மேலாளர் வாணி காரில் சென்றார்.
அவருடன் சகோதரி ஏழிலரசி சென்றார். காரை கார்த்திக் என்பவர் ஓட்டினார். இவர்கள் 3 பேரும் சென்ற கார் கேகே நகர் லட்சுமணசாமி சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்த கார் பிடிராஜன் சாலை வழியாக சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் இருந்த 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயன்றனர்.
இதில் காரில் பயணித்த வங்கி மேலாளர் வாணி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்திருந்தார். வாணியின் சகோதரி ஏழிலரசி, ஓட்டுனர் கார்த்திக் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஏழிலரசி, கார்த்திக் ஆகியோர் மீட்கப்பட்டு கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த வாணியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
கார் விபத்து நடந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய்க்காக குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதன் அருகே இருந்த மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த பெரிய மரம் கீழே விழுந்து விபத்து நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.