கோயம்பேடு சந்தையில் அதிகரிக்கும் கொரோனா.. 600 மொத்த கடைகளுக்கு மட்டுமே அனுமதி.. மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் உள்ள 3100 கடைகளில் 600 மொத்த விலை கடைகளை மட்டும் செயல்பட சென்னை மாநகராட்சி அனுமதித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் 3100 காய்கறிகடைகள் உள்ளது. இதுதவிர பூக்கடைகளும் ஏராளமாக உள்ளது. அந்தக் கடைகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர்.
அத்துடன் வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கோயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் என சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் காய்கறி வணிகம் செய்து வருகிறார்கள்.
கோயம்பேடு வியாபாரியால் கொத்துக்கொத்தாக பரவல்.. ஒரு நாளில் 47 பேருக்கு கொரோனா.. அதிரும் சென்னை
கொரோனா அச்சம்
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை வியாபரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் சுமார் 13 பேருக்கு கொரோனா இருப்பது இன்றைய நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமை அன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமனித இடைவெளி இன்றி கோயம்பேடு சந்தையில் குவிந்து காய்கறிகளை வாங்கி குவித்தனர். இதனால் பலருக்கும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ‘
இடமாற்றம் செய்ய
இந்நிலையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் கொரோனா பரவியதாலும், கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். தற்காலிகமாக கோயம்பேடு, கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் பகுதிக்கு கோயம்பேடு சந்தை மூன்றாக பிரித்து அமைக்க நேற்று ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா பரவினால்
அவர்கள் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தை தற்காலிகமாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்தனர். நேற்று பேச்சுவார்த்தையின் போது சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்களிடம் பேசும் போது, தற்போது 2 பேருக்கு கொரோனா பரவி உள்ள நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா பரவினால் கோயம்பேடு சந்தையை உடனே மூட வேண்டியது வரும் என்றார். மேலும் ஊரடங்கில் ஒரு நாள் கூட கோயம்பேடு சந்தையில் சமூக விலகல் பின்பற்றப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
சில்லறை வியாபாரம் இல்லை
இதற்கிடையில் நேற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று பங்கேற்ற 17 பேர் மட்டுமே இன்றும் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு சந்தையில் குறைந்த பட்சம் கடைகளையாவது அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மொத்தம் உள்ள 3100 கடைகளில் 600 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே சென்னை மாநாகராட்சி அனுமதி அளித்துள்ளது. சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. காய்கறி வரத்து அதிகமானால் மட்டுமே மாதவரம் பகுதிக்கு சந்தை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.