கைவிட்ட பருவ மழை.. வறண்டு வரும் சென்னை ஏரிகள்.. கோடைகாலம் கொடுமையாக இருக்குமோ?!
சென்னை: வட கிழக்குப் பருவ மழை இந்த முறை சென்னையைக் கைவிட்டது போலத் தெரிகிறது. மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் சென்னை குடிநீர்ப் பிரச்சினையிலிருந்து தப்ப முடியும் என்பதால் இந்த கோடை காலம் மிகக் கொடுமையாக இருப்பதற்கான வாய்ப்புகளை புறம் தள்ள இயலவில்லை.
தமிழகத்தில் இந்த முறை வட கிழக்குப் பருவ மழை பெரிய அளவில் பெய்யவில்லை. பற்றாக்குறைதான். ஒரு புயல் வந்தது. அந்தப் புயல் மக்களின் வாழ்வாதாரத்தைத் துடைத்துப் போட்டு அழித்துச் சென்றதே தவிர மக்களுக்கு சந்தோஷம் தரவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போய் பல காலமாகி விட்டது சுற்றிலும் உள்ள சில ஏரிகளை நம்பித்தான் குடிநீர் தேவைகள் உள்ளன. எனவே மழை பெய்து இந்த ஏரிகள் நிரம்பினால்தான் சென்னை வறண்டு போகாமல் தவிர்க்க முடியும். ஆனால் நிலவரம் கலவரம் தருவதாக உள்ளது.
குடிநீர் தரும் 4 ஏரிகள்
சென்னை மாநகரம் தனது குடிநீர்த் தேவைக்காக நம்பியிருப்பது நான்கு ஏரிகளை. சோழவரம், பூண்டி, செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம். இதில் பூண்டியும், செம்பரம்பாக்கமும் பெரியவை.
மழை பொய்த்தது
மழை உரிய நேரத்தில் பெய்தால்தான் இந்த ஏரிகளில் நீர் நிரம்பும். அதை வைத்துத்தான் சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை இயல்பு நிலையில் இல்லாமல் போனதால் நிலைமை கவலை தரும் வகையில் உள்ளது.
நீர் இருப்பு நிலவரம்
இன்றைய தேதிப்படி பூண்டியில் 353 மில்லியன் கன அடி நீர் (முழுக்கொள்ளளவு 3231) இருப்பு உள்ளது. சோழவரம் 48 (1081), செங்குன்றம் 1041 (3300), செம்பரம்பாக்கம் 133 (3645) மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
கவலை தரும் நிலவரம்
நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11,257 மில்லியன் கன அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது நீர் இருப்பானது வெறும் 1575 மில்லியன் கன அடி தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இங்கு 5183 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. இதனால் கடந்த ஆண்டு கோடை காலத்தை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.
மழை வராவிட்டால்
டிசம்பர் 31ம் தேதி வரை வட கிழக்குப் பருவமழைக்காலம் உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் பெரிய அளவுக்கான மழை இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே வரும் கோடை காலத்தில் சென்னையின் குடிநீர் தேவை மிகப் பெரிய கவலை தரும் அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்கள்.