தூசு துரும்பு இல்லை , சர் புர்னு வாகன சீறல்கள் இல்லை.. கிராம சூழலை கண் முன்னே கொண்டு வந்த சென்னை
சென்னை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சென்னையில் தூசு துரும்பு இல்லாமலும் வாகன ஹாரன் சப்தங்கள் இல்லாமலும் கிராமப்புற சூழலை போன்று காட்சியளிக்கிறது.
சென்னை, பெங்களூர், டெல்லி, திருவனந்தபுரம், கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அது சாலை போக்குவரத்தாக இருந்தாலும் சரி,ரயில், விமான போக்குவரத்தாக இருந்தாலும் சரி. ரயில்கள், விமானங்கள் அதிகளவில் இயக்கப்படும்.
குறிப்பாக சென்னையை எடுத்துக் கொண்டால் முக்கிய சாலைகளுக்கு வெளியே வீடு எடுத்திருந்தால் கூட அவ்வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்தால் வீடு முழுவதும் தூசி, துரும்பு படிந்திருக்கும்.
வாகனங்களின் இயக்கம்
அது போல் இரவு 11 மணி வரை வாகனங்களின் இயக்கம் காதை பிளக்கும். சிறிய முட்டு சந்துகளில் கூட சர் புர் என சீறி பாயும் வாகனங்களால் குழந்தைகள்,பெண்கள்,வயதானோர் என சாலைகளை கடக்கவே பயன்படுவர். அந்த அளவுக்கு ஒரு டிவிஎஸ் 50 கூட ரேஸ் வாகனம் போல் பறக்கும். இதில் டிரிப்ள்ஸ், 4 பேர் என ஒரே வாகனத்தில் செல்வோரும் உண்டு.
சாலைகளில் போக்குவரத்து
சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறாமல் செல்வோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பர். சிக்னல் போடுவதற்கு முன்னரே ஜூட் விடும் வாகனங்களும் வரும். ஆனால் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாகன போக்குவரத்து ஏதும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவுகிறது. கடைகளும் மூடப்பட்டுவிட்டது. எப்போதும் பிஸியாக இருக்கும் கோயம்பேடு மார்க்கெட் இன்று மூடியுள்ளதால் அங்கும் பேரமைதி நிலவுகிறது.
வாகனங்கள்
சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. வீடுகளும் வாகன இயக்கத்தால் தூசு துரும்பு ஏதும் காணப்படவில்லை. ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு செல்வோருக்கு மத்தியில் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆயுதமாக பயன்படுத்தி அதன் பின்னாலேயே வாகனங்கள் செல்லும் நிலை இன்று இல்லை.
முக்கிய சாலைகள்
அபார்ட்மென்ட்கள் என்றால் விளையாடும் குழந்தைகளின் சப்தம் ஏதும் இல்லை. சென்னையில் முக்கிய சாலைகளில் ஒரு மணி நேரத்திற்கு 1000 வாகனங்கள் செல்லும். ஊரடங்கு உத்தரவினால் சென்னையில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து முடங்கியது. இதனால் சென்னையை பார்ப்பதற்கு கிராம சூழலை கண் முன் கொண்டு வந்தது. ஆனால் சென்னையில் இருப்பவர்கள் கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். அங்கு ஜே ஜே வென கூட்டம் இருக்கிறதா என தெரியவில்லை.