என்ன ஆச்சு மெரினா கடற்கரைக்கு.. நுரையை கக்கியது, நிறம் மாறியது.. பீச்சுக்கு வந்தவர்கள் பீதி!
Recommended Video
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று, மக்களை பீதிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்தேறியது. மாலை வேளையில் அந்த பக்கமாக வாக்கிங் சென்ற பலரும் குடும்பத்தோடு சென்றவர்களும் இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அலையோடு அலையாக, பொங்கிப், பொங்கி நுரை தள்ளிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சோப்பு நுரை போல பொங்கி காணப்பட்டது மட்டுமின்றி மெரினா கடலின் தண்ணீர்கூட அடர்ந்த பழுப்பு நிறமாக மாறியது.
கலர் மாறிய கடல்
இந்த மாற்றங்கள் மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியது. குறிப்பாக கடலின் உள் பகுதியில் இவ்வாறு கடலின் வண்ணம் மாறியதை தெளிவாக பார்க்க முடிந்ததாக அதை நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கூவம் கழிவுகள்
இதுபற்றி தேசிய கடலோர ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமண மூர்த்தி, கூறுகையில், இது போல கடலில் மாற்றம் மற்றும் நுரை ஏற்படுவது என்பது பருவமழை காலத்தின் ஆரம்பத்தில் இயல்பாக ஏற்படக்கூடியதுதான். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்து வரக்கூடிய கழிவுகள் கடலில் சேர்கிறது. அப்போது கடலில் வீசும் கடுமையான காற்று காரணமாக இவ்வாறு நுரை கரை ஒதுங்குகிறது, என்று அவர் விளக்கம் அளித்தார்.
பெங்களூர் சம்பவம்
பெங்களூரின் பெல்லந்தூர் ஏரியில் அவ்வப்போது இதுபோல நுரை பொங்கி கரை ஒதுங்கும். இதனால் சாலையில் வாகனங்கள் கூட போக முடியாது. இதற்கு காரணம் நகரில் உள்ள கழிவுகள், சாக்கடை கால்வாய் மூலமாக ஏரிகளை சென்றடைவதுதான்.
மெரினா சூழல்
இந்த காரணத்தால் அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து, மாசுக்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது சென்னையிலும் இதுபோன்ற பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இது மெரினாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள்.