சென்னை மக்களே குட் நியூஸ்.. கொண்டாடுங்க.. வீக் என்ட்ல மழை இருக்காம்!
Recommended Video
சென்னை: சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயில் முடிந்த போதும் சென்னையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறது.
இரவு நேரங்களிலும் புழுக்கம் குறையாமல் உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் அவ்வப்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
நாங்குநேரி எனக்கே.. தாம் போட்டியிடத்தான் 'ஆழம் பார்த்தாரா' உதயநிதி?
அனல்காற்று நீடிக்கும்
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வெளியே செல்ல வேண்டாம்
அதேபோல் புதுச்சேரியிலும் வரும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பசலனத்தால் மழை
அதேநேரத்தில் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாகை, கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மழை
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.