தலைநகர் சென்னை சூப்பர் சாதனை..! மெகா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று (19.09.2021) நடைபெற்ற 1600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுவரை கொரோனா பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவை ஒழிக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்தை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
வேக்சின் முகாம்
அதேபோல தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி என்ற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி மாநிலத்தில் முதல்முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், மக்களின் அதீத ஆர்வத்தால் இலக்கை தாண்டி அன்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் 29 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. முதல் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி 2ஆவது மெகா வேக்சின் முகாம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அது செப். 19ஆம் தேதி - இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது. இன்றும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதீத ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 1600 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் மூலம் தலைநகரில் மட்டும் 2,01,805 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று (19.09.2021) நடைபெற்ற 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2,01,805 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 26.08.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 12.092021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 191350 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அமைச்சர் ஆய்வு
இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட வேண்டும் என அரசு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் இன்று (19.09.2021) 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை இன்று (19.09.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர். ரயில் நிலையத்திலிருந்த பயணிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தலைமைச் செயலாளர்
இதேபோன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173, பசுமை வழி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை இன்று (19.09.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தலைமைச் செயலாளர் தடுப்பூசி மையங்களில் இருந்த பொதுமக்களிடம் கோவிட் தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்துக் கலந்துரையாடினார். மேலும், இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்த பெருநகர சென்னை மாநகராட்சி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், இந்த முகாம்களில் இணைந்து பணியாற்றிய சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
தலைநகர் சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 18.09.2021 அன்று வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 3134,803 முதல் தவணை தடுப்பூசிகள், 15,39,539 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 46,74,342 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 754,830 முதல் தவணை தடுப்பூசிகளும் 2,48,695 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என 10:13.525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 18.09.2021 அன்று வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 56,87,867 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு லட்சம் பேருக்கு வேக்சின்
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், இன்று (19,09.2021) நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 2,01,805 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கோவிட் தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்கின்ற நிலையில், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.