Diwali: சென்னையில் ரூ1-க்கு சட்டை, ரூ 10-க்கு நைட்டி விற்பனை.. அலைமோதும் கூட்டம்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் 1 ரூபாய்க்கு சட்டையும், 10 ரூபாய்க்கு நைட்டியும் வழங்கி வருவதால் கடையின் முன்பு ஏராளமான கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள், இனிப்பு, பலகாரங்கள்தான் நினைவுக்கு வரும்.
இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி மலிவு விலையில் துணிமணி வழங்க விரும்பினார்.
ரூ.10-க்கு நைட்டி
அதன்படி ரூ.1-க்கு சட்டையும், ரூ 10-க்கு நைட்டியும் விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே இந்த விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.
200 பேருக்கு
இந்த விளம்பரத்தை அடுத்து ஏராளமானோர் அதிகாலை முதலே கடை வாசலில் திரண்டனர். இந்த விற்பனை தொடங்கிய சில நாட்களில் தினமும் 50 பேர் வரை வாங்கி சென்றனர். இதையடுத்து கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்ததால் தினமும் 200 பேருக்கு டோக்கன் கொடுத்து வருகிறார்.
குறைந்த விலையில்
இந்த டோக்கனை பெற மக்கள் அதிகாலை முதலே கடை வாசல் முன்பு காத்து கிடக்கின்றனர். எந்த பொருளையும் இலவசமாக கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் வாடிக்கையாளர்களை கவுரவப்படுத்தும் நோக்கிலும் குறைந்த விலையில் இந்த துணிகளை விற்க ஆனந்த் முன்வந்தார்.
மகிழ்ச்சி
அது போல் இந்த மலிவு விலை விற்பனையால் மற்ற வணிகர்கள் பாதிக்காத வண்ணம் தினமும் காலை 1 மணி நேரம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த துணிகளை ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.