தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிநிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (5.8 to 7.6 km asl) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல்,. கன்னியாகுமரி, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
மிதமான மழை
16மற்றும் 17ம் தேதிகளில் தென்தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும்.
பனிமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரியாகவும் இருக்கும்.
நாகையில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகி உள்ளது.. ஒருசில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம், ஈச்சன் விடுதி (தஞ்சை) தலா 9 செமீ மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 8 செமீ, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பாபநாசம் (நெல்லை), மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய ஊர்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது. மதுக்கூர் (தஞ்சாவூர்), மணிமுத்தாறு (நெல்லை) ராமேஸ்வரம், தலைஞாயிறு ஆகிய ஊர்களில் தலா 6 செமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 5 செமீ மழை பெய்துள்ளது.
எப்போது மழை விலகும்
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. வடகிழக்கு பருவ மழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது" இவ்வாறு சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.