தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை... சென்னையில் மேக மூட்டம் - வானிலை மையம்
ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: ஆந்திரா கடற்கரை, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடிப்பதால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் அபரிமிதமாக பெய்துள்ளது. சில மாவட்டங்களில் பற்றாக்குறை மழை இருந்தாலும் பல மாவட்டங்களில் பெய்துள்ள மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர், திருப்பூர் அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
அதிரடி மாற்றங்கள்... அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்..!
எங்கெங்கு மழை பெய்யும்
இந்தநிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானம் மேக மூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
செப்டம்பர் 18 முதல் 20 வரை மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த கடற்பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயரும் கடல் அலை
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3மீட்டர் முதல் 3.8 மீட்டர் வரை கடல் அலை உயரக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் செப்டம்பர் 16 வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பாக பெய்யும் அளவை விட அதிக அளவு பெய்துள்ளதாக வானிலை மைய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.