ஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்!
சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில். தென்மேற்கு பருவ மழை காற்றின் போக்கால் நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்
தென் மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா, காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் சத்யபாமா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், தரமணி, மகாபலிபுரம், சென்னை விமான நிலையம், சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆகிய இடங்களில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது இவ்வாறு கூறினார்கள்.