இரு நாட்களில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்
சென்னை: இரு நாட்களில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கி விண்ணை முட்டி கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் மழை பெய்து 195 நாட்கள் ஆயிற்று. இதனால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. தகிக்கும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
அனல் கக்கும் வெயிலால் திறந்தவெளியில் வியாபாரம் செய்பவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் வெப்பம் குறையும். இன்னும் 3, 4 நாட்களில் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழைக்கான வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.