எங்க வேணாலும் போய் மீன் பிடிங்க.. ஆனா இந்த பக்கம் மட்டும் போய்ராதீங்க.. இத நாங்க சொல்லலைங்க!
சென்னை: மாலத்தீவு, லட்சத்தீவு, இந்திய பெருங்கடல் ஒட்டிய இடங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி அளித்துள்ளார்.
குமரிக் கடல், தென் தமிழக கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, மதுரை, நாகை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மாலத்தீவு, லட்சத்தீவு, இந்திய பெருங்கடல் ஒட்டிய இடங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 247.1 மீ.மி. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் அதிகமான மழையாகும். கடந்த 1901-ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் பதிவான 3-ஆவது மழையின் அளவும் இதுவே ஆகும் என புவியரசன் தெரிவித்தார்.