அடுத்த 3 மணி நேரத்திற்கு.. இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே கோடைக் காலம் மக்களை வாட்டி வதைத்தது. பல இடங்களில் வெப்பநிலையும் சதமடித்தது. இதனால் மக்கள் பெரும் இன்னலை எதிர்கொண்டனர்.
இந்த மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை சென்னை, போரூர், மாங்காடு பகுதியில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் நாட்களில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.