சூறாவளி வீசப்போகிறது.. 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் முக்கிய அலார்ட்
சென்னை: வளிமண்டல மேலடுககு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்பட 15 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள் நாளை முதல் 21ம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மழை வெயிலில் சேதமாகாது.. பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு.. வாங்குவது எப்படி ?
15 மாவட்டங்களில் மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக, வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
தமிழக மழை நிலவரம்
கடநத் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெங்களூர் (புதுக்கோட்டை), வல்லம் (தஞ்சாவூர்) ஆகிய ஊர்களில் 13 செமீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 11 செமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூரில் 9 செமீ மழையும், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி, திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், லால்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில அரிமளம் ஆகிய ஊர்களில் 8 செமீ மழையும் பெய்துள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர், புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 7 செமீ மழை பெய்துள்ளது.
சூறாவளி வீசும்
மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை (19ம் தேதி) மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடம். இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற கூடும். எனவே மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீடட்ர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 20ம் மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீடட்ர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 21ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 45-55 கிலோமீடட்ர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.