இனியும் தள்ளிப்போகாதே பருவமழையே... நவம்பர் 1ல் தொடங்கும் என வானிலை மையம் கணிப்பு!
சென்னை : நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்திலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது பருவமழை. இந்நிலையில் வானிலை முன் அறிவிப்பு குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருக்கிறது.
இந்த சுழற்சியால் வடமேற்கு வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்து மேற்கு திசை நோக்கி நகரும் போது வடகிழக்கு பருவக்காற்று வலுவடைந்து வடகிழக்கு பருவமழையாக வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம். தமிழகம், புதுவையை ஒட்டியுள்ள தெற்கு கடலோர பகுதிகள், தெற்கு உள்கர்நாடகாவை உள்ளடக்கிய பகுதிகள், ராயலசீமா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை துவங்க சாதகமான சூழல் உருவாகி வருகிறது. டிட்லி மற்றும் லூபான் புயல் காரணமாகவே பருவமழையானது தாமதமாகியுள்ளது.
[ஜாவா கடலில் இந்தோனேஷிய விமான பாகங்கள்.. எரிப்பொருளும் மிதக்கும் வீடியோ]
வருகிற 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த காலத்தில் 16 செ.மீ அளவிற்கு மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். சென்னையில் 12 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையிலும் சராசரியை விட 51 சதவீதம் குறைவான அளவே மழை பெய்தது என்றும் ஸ்டெல்லா கூறினார்.