காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரேவி.. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மாதம் நவம்பர் 24-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதையடுத்து நிவர் கரையை கடந்த ஒரு வாரத்தில் அடுத்ததாக புரேவி புயல் உருவானது. இதனால் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
வலுவிழப்பு
இந்த புரேவி புயல் நேற்று முன் தினம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று ஒரு நாள் முழுவதும் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரே இடத்தில் இருந்தது. இதனால் தென் தமிழகம், கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
சென்னை வானிலை மையம்
இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது.
தெற்கு கேரளா
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கிறது. அதன்பின்னர், மேற்கு- தென்மேற்கு திசையில் நகர தொடங்கி, தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லக் கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகம்
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும்.
புதுவை
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.