டைம் குறிச்சாச்சு.. கொளுத்த போகுது வெயில்.. மழையும் இருக்குமாம்.. எச்சரித்த வானிலை மையம்
அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழையும் இருக்கும், கடுமையான வெயிலும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதில் வெப்பம் குறித்த எச்சரிக்கையைதான் வானிலை மையம் அதிகமாக வலியுறுத்தியுள்ளது.. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரைக்கும் மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று ஒரு அறிக்கையையே வெளியிட்டு இருக்கிறது!
தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.. இந்த சமயத்தில் லாக்டவுன் பிறப்பிக்கப்படவும் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி விட்டனர்.
புழுக்கம், வெப்பத்தால் அவதிக்கும் உள்ளாயினர். எனினும் கடந்த வாரங்களில் ஆங்காங்கே நல்ல மழை பெய்தது.. கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பொழிவு மக்களை மகிழ்ச்சி அடையவும் செய்தது.
எச்சரிக்கை
பரவலான மழை தமிழகத்துக்கு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையமும், வெதர்மேனும் சொல்லியிருந்தாலும், சென்னைக்கு அந்த குடுப்பினை கிடைக்கவே இல்லை... இனியாவது மழை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து கிடந்தால், அதற்கு வெயில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
அதில், "தமிழகத்தில் உள் மாவட்டங்களான மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகியவற்றில் அதிகபட்ச வெப்பநிலை உயர்வின் காரணமாக அடுத்த வரும் 3 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
லேசான மழை
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில்
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசான மழை என்பது 4 மாவட்டங்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களில் வெயில் கொளுத்தும் என்பது கலக்கத்தை தந்து வருகிறது. நேற்று மட்டும் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது... இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் கோரியுள்ளதால் மக்கள் அனைவருமே வீடுகளில் முடங்குவதுதான் இப்போதைக்கு சிறந்த வழியாகும்!!