சங்கம் தொடங்கிய 8 பேரை சேர்க்க சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு.. பேச்சுவார்த்தையில் பின்னடைவு
சென்னை: மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்க சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பதால் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக 3பேர் தொழில்நுட்ப பணியாளர்கள், ஸ்டேசன் கண்ட்ரோலர்கள் 2பேர் டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் ஒரு ஜுனியர் என்ஜினியர் உள்பட 8 பேர் சேர்ந்து தொழிலாளர் நல சங்கத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் 8 ஊழியர்களும் மெட்ரோ சட்டவிதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அவர்களை பணிநீக்கம் செய்தது.
சென்னையில் 40 டிகிரி வெயில்.. இது சும்மா டிரெய்லர்தான்.. இனிமேல்தான் மெயின் பிக்ஷர்- வெதர்மேன்
மெட்ரோ ஊழியர்கள்
இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான மெட்ரோ ரயில் ஊழியர்கள், நேற்று முதல் ரயில்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.
ரயில் சேவை பாதிப்பு
இதனால் நேற்று மெட்ரோ ரயில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக பணியாளர்களை கொண்டு மெட்ரோ ரயில்களை இயக்கி வருவதாகவும், மெட்ரோ ரயில் சேவை சீராக உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதனிடையே சென்னை தொழிலாளர் நல அலுவலகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் பணியாளர் தரப்பு, தொழிலாளர் நல ஆணையம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று காலை முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏற்க மறுக்கும் மெட்ரோ
இன்று 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. ஏனெனில் தொழிலாளர் நல சங்கம் தொடங்கியதால் பணிநீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. அதனால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதிப்பு
அதேநேரம் பணியாளர்களின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் ஊழியர்களின் போராட்டத்தால் இன்று முழுமையான சேவைகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.