சென்னையில் மெட்ரோ ரயில் சேவை... ஆரம்பிச்ச 2வது நாளிலே ரிப்பேர்.. புலம்பிய பயணிகள்
Recommended Video
சென்னை:சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளதால் பயணிகள் அவதியும், அதிருப்தியும் அடைந்தனர்.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை ஆரம்பமாகியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் வழக்கமாக மெட்ரோ ரயிலில் செல்வோர் மட்டுமின்றி இலவசமாக பயணிப்பதற்கு ஏராளமான பயணிகள் மெட்ரோ ரயில் நிலையம் வந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
அலுவலகங்களுக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர், அவசர வேலையாக செல்வோர் என பல தரப்பினர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
சேவை பாதிப்பு குறித்து முந்தைய நிறுத்தத்திலேயே சொல்லி இருக்கலாம். நாங்கள் வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்திருப்போம். வழியிலேயே கோளாறு காரணமாக எங்களை இறக்கிவிட்டால் எங்கே போவது என்று கூறினர்.
இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், வல்லுநர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.