சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தி.. ஆன்லைனில் லாரி தண்ணீர் முன்பதிவு.. புதிய சேவை அறிமுகம்
சென்னை: ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போதே லாரி தண்ணீர் கிடைக்கும் தேதி தெரியும் வகையில் புதிய சேவையினை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் "சென்னை குடிநீர் வாரியம் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 12,000 நடைகள் வரை லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கி வருகின்றது. இதில் 2,500 நடைகள் 'டயல் பார் வாட்டர்' முறையில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டதால், குறிப்பிட்ட காலத்திற்குள் குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதனை நிவர்த்தி செய்வதற்காக குடிநீர் லாரிகளின் எண்ணிக்கையினை 850 லிருந்து 1150 வரை அதிகரித்த போதிலும், லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு நுகர்வோர் அதிக நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை முதல் புதிய நடைமுறை
இதை தவிர்க்கும் வகையில், நுகர்வோரின் தேவைக்கேற்ப முன்பதிவு செய்யும் போதே குடிநீர் வழங்கப்படும் தேதியை உறுதி செய்வதற்கு தேவையான மாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ள சேவை முறையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் 29ம்தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
தண்ணீர் முன்பதிவு
இதன் மூலம் குடிநீர் தேவைக்காக முன்பதிவு செய்யும்போது குடிநீர் வழங்கப்படும் தேதி உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, 29ம்தேதி அன்று முன்பதிவு செய்பவர்கள், குடிநீர் பெற்றுக்கொள்ளும் தேதியை விருப்பத்தின் பேரில் அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 30 அல்லது 31ம்தேதி ஆகிய ஒரு தேதியை தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
குடியிருப்புகளுக்கு நீர்
ஒவ்வொரு பகுதிக்கும் இயக்கப்படும் நடைகளின் எண்ணிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விநியோகிக்கும் வசதியைப் பொறுத்து முன்பதிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இத்திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்பு நுகர்வோர்களுக்கு 9ஆயிரம், 12ஆயிரம், மற்றும் 16 ஆயிரம் கொள்ளளவு லாரிகளும், அடுக்குமாடி அல்லாத குடியிருப்பு நுகர்வோர்களுக்கு 3ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 9ஆயிரம் கொள்ளளவு லாரிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நுகர்வோருக்கு அறிவிப்பு
நுகர்வோர் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தில் இணையதள வழி மூலமாக முன்பதிவு செய்ய இயலாதவர்கள், தொலைபேசி வாயிலாக அழைப்பு மையத்தை (044-4567 4567) தொடர்பு கொண்டு 3ஆயிரம் கொள்ளளவு கொண்ட லாரிகளை மட்டும் முன்பதிவு செய்து, தண்ணீர் வழங்கப்படும் போது கட்டணத்தை செலுத்தலாம். இப்பதிவை ரத்து செய்யும் வசதி இல்லை. எனவே நுகர்வோர் தேவைக்கேற்ப மட்டுமே முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9மணி முதல்
சென்னை குடிநீர் வாரியத்தில் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு காலை 8 மணி முதலும், 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு காலை 10 மணி முதலும், 12 ஆயிரம் லிட்டருக்கு மதியம் 12 மணி முதலும், 16 ஆயிரம் லிட்டருக்கு 12 மணி முதலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மிக குறைவான கட்டணம்
2 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு வீட்டு பயன்பாடு என்றால் 350 ரூபாய் கட்டணமும், மற்ற பயன்பாடுகளுக்கு 350 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு வீட்டு பயன்பாடு என்றால் ரூ.400ம் மற்ற பயன்பாடுகளுக்கு ரூ.400ம், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.475ம், பிற பயன்பாடு என்றால் 700ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 9ஆயிரம் லிட்டருக்கு வீட்டு பயன்பாடு என்றால் ரூ.700ம், பிற பயன்பாடுகளுக்கு 1000ம்மும், 16 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1200ம், பிற பயன்பாடு என்றால் ரூ.1700ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.