சென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்
சென்னை: சென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் 15.3 கி.மீ தூரத்துக்க மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டது. இதன்படி சென்ட்ரல்- பரங்கிமலை- வண்ணாரப்பேட்டை- விமானநிலையம் வழித்திடத்தில் முதற்கட்ட விமான நிலையப்பணிகள் முடிந்து சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகள் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி 95 ஆயிரம் பயணிகள் பயணிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவெற்றியூர் விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட பணிகள் நடந்து வருகிறது.
புதிய திட்டம்
இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில் வழிப்பாதையை விரிவுப்படுத்த திட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை விமானநிலையத்தில் இருந்து புதிய பேருந்துநிலையம் அமைய உள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோரயில் வழித்தடத்தை ஜிஎஸ்டி சாலையல் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்
திட்ட அறிக்கை
மொத்தம் மூவாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பணிகள் வரும் 2021-ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக கூறப்படுகறிது .அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
15.3 கிமீ தூரம்
இதன்படி விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.3 கிமீ தூரம் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ஒரு ரயில் நிலையத்திற்கும் இன்னொரு ரயில் நிலையத்திற்கும் 1.2 கிலோமீட்டர் இடைவெளி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இதன்படி பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 மாதத்தில் தயாராகும்
இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிநடந்து வருகிறது. எவ்வளவு தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைப்பது, இதற்காக எவ்வளவு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். விரிவான திட்ட அறிக்கைதயாரிக்க 6 மாதம் முதல் 8 மாதம் ஆகும் என்றும் இந்த அறிக்கை அரசிடம் ஒப்புதலுக்காக வழங்குவோம் என்றும் அதன்பிறகு அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
மக்களிடம் வரவேற்பு
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு இடையே அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் சென்னை புறநகர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என தெரிகிறது. ஏனெனில் கிளம்பாக்கத்தில் ஏறினால் சென்னையில் வடக்கு எல்லைப்பகுதியான திருவெற்றியூர் வரை எளிதாக செல்ல முடியும். இதேபோல் சென்னையின் எந்த பகுதிக்கும் விரைவாக செல்லமுடியும்.