"மீ டு" அபஸ்வரம்.. சென்னை மார்கழி சீசனில் பாட்டு பாட 7 கலைஞர்களுக்கு தடை!
சென்னை: மீ டூ புகார் எதிரொலியாக மார்கழி கச்சேரியில் 7 கர்நாடக கலைஞர்கள் பாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை இசை அகாதெமி தெரிவித்துள்ளது.
மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக தெரிவித்து வருகின்றனர். இதில் பிரபலங்களின் பெயர்களும் அடிபடுவதால் இங்கு இந்த பிரச்சினை நடக்கும் என்ற ஒரு எல்லையில்லாமல் போய்விட்டது.
இந்த புகார் கர்நாடக இசை கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. கர்நாடக இசை உலகில் மீ டூ புகாரில் 7 கலைஞர்கள் சிக்கியுள்ளனர். என் ரவிகிரண், ஓஎஸ் தியாகராஜன், மன்னார்குடி ஏ ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர் ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகிய 7 பேர் ஆவர்.
இவர்கள் 7 பேரும் வரும் டிசம்பர் மாதம் நிகழும் மார்கழி மகா உற்சவத்தில் கலந்து கொண்டு பாடவும் பங்கேற்கவும் சென்னை இசை அகாதெமி தடை விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை மியூசிக் அகாதெமியின் தலைவர் முரளி கூறுகையில் இந்த 7 பேரும் மார்கழி உற்சவத்தில் பங்கேற்க இருந்தார்கள்.
மேற்கண்ட 7 கலைஞர்கள் மீது மீ டூ புகாரை அடுத்து நாங்கள் அவர்களை விலக்கி வைக்கும் முடிவுக்கு வந்தோம். நாங்கள் நீதிமன்றம் போல் செயல்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் உள்ளதால் இந்த கலைஞர்களை பாட வைப்பதா வேண்டாமா என்பது எங்களுடைய உரிமை.
வெறும் புகாரை வைத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வரவில்லை. இரண்டு மூன்று பேர் கூறுவதை வைத்து இந்த முடிவுக்கு வந்தோம். பாதிக்கப்பட்டவர்களுடன் தனியாக பேசினோம். அதன்பிறகுதான் முடிவுக்கு வந்தோம் என்றார்.