வட சென்னை மீண்டும் திமுகவிடம் திரும்புமா.. தொகுதியை தக்க வைக்குமா அதிமுக.. விறுவிறு தேர்தல் களம்!
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் காலத்திலிருந்தே திமுகவின் வெற்றி கோட்டை என்று கருதப்பட்டதுதான் வடசென்னை தொகுதி. இங்கு தொகுதி பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடமே இருந்து வந்துள்ளது.
நாஞ்சில் மனோகரன், என்விஎன் சோமு, செ.குப்புசாமி, டி.கே.எஸ் இளங்கோவன் போன்றோரை பெற்று தந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது இந்த தொகுதிதான்.
ஆனால் வடசென்னை தொகுதி, திமுக வசமே நீண்ட காலமாக இருந்து வந்தாலும் தென்சென்னையைப் போல் அடிப்படை வசதிகள் இந்த தொகுதியிலும் செய்யப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதுமே நிலவி வந்தது. இந்த சமயத்தில்தான், வட சென்னை அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார் டி.ஜி. வெங்கடேஷ பாபு.
99,704 வாக்குகள்
எம்எஸ்சி படித்துள்ளார். வயது 58 ஆகிறது. இவர் திமுகவின் கிரிராஜனை எதிர்த்து போட்டியிட்டார். அதனால்தான் 1,422,386 வாக்காளர்களில் 99,704 வாக்குகள் வித்தியாசத்தில் கிரிராஜனை தோற்கடித்தார். பொறுப்பேற்றவுடன் இவரது தொகுதிக்காக 27.39 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்டது. இவற்றில் 21.77 கோடியை தன் தொகுதிக்காக செலவிட்டுள்ளதுடன், 12.53 கோடி ரூபாயை இருப்பிலும் வைத்திருக்கிறார்.
685 கேள்விகள்
நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் 81 சதவீதம் வைத்திருக்கிறார். அதனால்தான் இவர் இதுவரை 61 நாடாளுமன்ற அவை கூட்டங்களில் கலந்து கொண்டு, கிட்டத்தட்ட 685 கேள்விகளை எழுப்பி உள்ளார். அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர் என்ற பெயரை பெற்றது இவர் பிளஸ் பாயிண்ட் என்றாலும், தொகுதி பிரச்சனையை முற்றிலுமாக களைந்தாரா என்பது கேள்வியாக உள்ளது.
சுகாதார சீர்கேடுகள்
வடசென்னையை பொறுத்தவரை முக்கிய பிரச்சனையே டிராபிக்தான். இதற்கு அடுத்தபடியாக இது மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் என்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
3-வது ரயில் முனையம்
ஆனால் இதனையெல்லாம் முற்றிலுமாக தீர்த்து வைத்து தொகுதி வளர்ச்சிக்காக வெங்கடேஷ்பாபு செய்திருக்கிறாரா என்றால், திருப்திகரமான பதில் வரவில்லை. ஆனால், சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே நிலையங்களைபோல ராயபுரத்தை 3-வது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பத்திலிருந்தே வைக்கப்பட்டது.
வெற்றிவேல்
இது விரைவில் நிறைவேற போவதாக தெரிகிறது. மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளதில் நிச்சயம் வெங்கடேஷ் பாபுவின் பங்கு நிறையவே உள்ளது. அதிமுக ரெண்டாக பிரிந்து, இப்போது வடசென்னை பொறுப்பாளராக வெற்றிவேல் இருக்கிறார்.
திமுக வெல்லுமா?
அதனால் வடசென்னை தொகுதியில் இந்தமுறை யாரை நிறுத்த போகிறார்கள் என்பது முடிவாகவில்லை. எனவே வெங்கடேஷ்பாபுவே திரும்பவும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது திரும்பவும் திமுக தன் கோட்டையை எட்டிப் பிடித்துவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.