ஆரம்பமே அமர்க்களம்.. சென்னை மக்கள் நேரடியாக வீடியோ காலில் கமிஷனரிடம் பேசலாம்.. மகேஷ்குமார் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார்.
இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மகேஷ்குமார் அகர்வால். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.
சென்னை போலீஸ் கமிஷனராக பதவியேற்றார் மகேஷ்குமார் அகர்வால்.. பல விருது பெற்ற சாதனையாளர்
வீடியோ கால்
போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறேன். பொதுமக்கள் தங்கள் குறைகளை வீடியோ கால் மூலமாக என்னிடம் சொல்வதற்கு ஏற்பாடு செய்ய உள்ளேன். தற்போது பொதுமக்கள் கமிஷனர் அலுவலகம் வருவதற்கு கஷ்டமாக இருக்கும். எனவே, தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, வீடியோ கால் மூலமாக பொதுமக்கள் என்னிடம் அவர்கள் குறைகளை சொல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதேபோன்று போலீசார் நலனை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை செய்வோம்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை
கொரோனா தடுப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவுப்படி அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் அத்தியாவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் சென்னை காவல் துறைக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். இதன்பிறகு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
போலீசாருக்கு முன்னெச்சரிக்கை
போலீஸாருக்கு கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறதே, இதை தவிர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, கொரோனா தடுப்புக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான் சிறப்பானது. ஆனால் காவல்துறையின் பணியே வெளியே வந்து பொதுமக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிலைதான். எனவே பணியாற்றக்கூடிய நேரத்தில் முடிந்த அளவுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி நோயிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்றார்.
Recommended Video
குற்றங்களை குறைப்பது முதல் நோக்கம்
எது உங்களுடைய பணிக் காலத்தின் முக்கியமான நோக்கமாக இருக்கும் என்ற கேள்விக்கு, பொதுமக்களுக்கு எவ்வாறு சேவை செய்யலாம் என்பதும், அவர்கள் குறைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதும்தான் எனது பணியின் முதல் நோக்கமாக இருக்கும். குற்றங்களை குறைப்பதும் எனது முக்கியமான நோக்கமாக இருக்கும். இதற்கெல்லாம் என்னென்ன திட்டங்கள் உள்ளதோ, அது அனைத்தையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். பொதுமக்களுடன் காவலர்கள் சமூக உறவைப் பேணுவதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.