சென்னையில் அம்மா உணவகத்தை இடிக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி!
Recommended Video
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க முயன்றனர். இதை எதிர்த்து, அப்பகுதியினர் அம்மா உணவகம் முன்பு கையில் தட்டு ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள அம்மா உணவகம் உள்ளது. ஆனால் இது புரம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தை இடிப்பதற்காக சென்றனர். இன்று காலை நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தகவல் அறிந்த அப்பகுதியினர் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி இடித்தேயாக வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதை ஏற்காத அப்பகுதி மக்கள் அம்மா உணவகத்தின் முன்பு தர்ணா நடத்தினர். பெண்கள், ஆண்கள் என சுமார் 50 பேர் கையில் தட்டு வைத்தபடி கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அம்மா உணவகம் தற்பொழுது வரை இடிக்கபடாமல் உள்ளது. அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மா உணவகத்திற்கு ஆதரவாக மக்களே போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.