கொரோனா.. தென் மாவட்டங்களிலுள்ள சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. கிராமங்களின் நிலை?
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால், ஊரடங்கு உத்தரவு தொடரப்பட்டுள்ள நிலையில் கூட, பலரும் தற்காலிகமாக ஊரை காலி செய்துவிட்டு, தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
மே மாதம் 3ம் தேதி முதல் மூன்றாவது கட்ட ஊடரங்கு தொடங்கியபோது பல்வேறு தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையில், டீக்கடைகள் உள்ளிட்டவற்றை கூட திறப்பதற்கு, தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கிவிட்டது. ஆனாலும் கூட, நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களை நோக்கி சென்னையில் வசித்த மக்கள் கிளம்பி சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் கணிசமாக தென் மாவட்ட கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். தொழில் மற்றும் வேலை நிமித்தமாக நீண்ட காலமாக சென்னையில் வசிக்கிறார்கள். அதில் கணிசமானோர் சொந்த வீடுகளை கட்டிக் கொண்டு அல்லது பிளாட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு கூட செட்டிலாகி விட்டனர்.
லாரியில் தொங்கியபடி.. ஒரு கையில் கயிறு..மறு கையில் பிள்ளை.. தவிக்கும் தந்தை.. கலங்கடித்த புகைப்படம்!
தெருக்களில் பாதிப்பு
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகரித்துள்ளது. தங்கள் தெருக்களில் ஏதோ ஒரு வீட்டிலாவது, நோய் பாதிப்பு உள்ளோர் இருப்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். இது பதற்றமாக மாறுகிறது. எனவே, ஊரை காலி செய்துவிட்டு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். உதாரணத்துக்கு நெல்லை மாவட்டம், திசையன்விளை தாலுகா, உவரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, குட்டம் கிராமத்தை எடுத்துக்கொள்ளலாம். திருமண வீடு என்ற பெயரில் பாஸ் வாங்கிக் கொண்டு பலரும், சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லை
இங்கு தனிமைப்படுத்தல் போன்ற நடைமுறைகளையும் காவல்துறை எடுக்கவில்லை. ஊரின், தலையாரி ஏதாவது, தகவலறிந்து யார் வீட்டுக்காவது சென்று விசாரித்து பார்த்தாலும், அவர்கள், தாங்கள் வந்து பல நாட்களாகி விட்டது என்பது போன்ற பதில்களைத்தான் சொல்கிறார்கள். இது ஒரு உதாரணம் தான். இதுபோல, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல கிராமங்களுக்கு சென்னைவாழ் மக்கள் வருகை தந்துள்ளனர்.
14 நாட்கள் தனிமை
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்லும்போது, அவர்களை தக்க முறையில் பரிசோதிக்க வேண்டும். ஊருக்கு சென்றாலும் அங்கு அவர்கள், பொது இடங்களில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை, இப்போதெல்லாம் காவல்துறை பெரிதாக கண்டு கொள்வதுபோல தெரியவில்லை.
அறிகுறிகள் இல்லை
தென் மாவட்ட கிராமங்களில் பெரும்பாலும் முதியவர்கள்தான் வசித்து வருகிறார்கள். சென்னை போன்ற இடங்களிலிருந்து மக்கள் அங்கு செல்லும்போது அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இளம் வயதினருக்கு பெரும்பாலும் வைரஸ் பாதிப்பு இருக்கக் கூடிய அறிகுறிகள் தெரிவதில்லை. எனவே, நகரங்களில் இருந்து செல்லும் இளம் வயதினர், தங்களுக்கு தெரியாமலே, கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கு அதை பரப்பிவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
வாகன தணிக்கை
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, கிராமங்களில், கொரோனா பரவிவிடாமல் தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, இதையெல்லாம் உணர்ந்து, தென் மாவட்டங்கள் செல்ல கூடிய சாலைகளில், உரிய வாகன தணிக்கை நடத்தப்படவேண்டும். கிராமங்களில் காவல் துறையினர், வீடு வீடாக சோதனைகளை நடத்தி வெளியூரிலிருந்து வந்தோரை தனிமைப்படுத்த வேண்டும், என்பது போன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.