சத்தமில்லா தீபாவளி... சென்னையில் களைகட்டும் கடைசி நேர ஷாப்பிங்!
சென்னை: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நாளை தீபாவளி என்றாலும் சென்னை நகரம் பட்டாசு சத்தம் இல்லாத அமைதியான தீபாவளியாகவே காணப்படுகிறது. துணிக்கடைகள் நிறைந்திருக்கும் தியாகராய நகர் பகுதியில் கடைசி நேர ஷாப்பிங்கில் மக்கள் இறங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இனிப்பு, பட்டாசு, புத்தாடை என சந்தோஷத்தின் மேல் சந்தோஷமாக இருக்கும் இந்த நாளிற்காக குழந்தைகளும் பெரியவர்களும் ஆண்டு முழுவதும் காத்திருப்பர்.
தீபாவளியன்று அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடைகளை அணிந்து பட்டாசு வெடி போட்டுவிட்டு அம்மா சுட்டு வைத்திருக்கும் பலகாரங்களை ஒரு பிடி பிடிப்பதில் இருக்கும் சந்தோஷமே அலாதி. சம்பளதாரர்கள் போனஸ் பிரச்னைகளை எழுப்பி அதற்கு ஒரு தீர்வை எட்டி அந்தப் பணத்தை கையில் வாங்கியதும் நாடி ஓடுவது குடும்பத்தினருக்கு தேவையானவற்றை வாங்குவதற்கே.
[தீபாவளி நாளில் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் - நவ.7ல் நல்ல நேரம்]
கடைசி நேர பர்சேஸ்
தீபாவளி ஷாப்பிங் கூட்டத்தில் இருந்து தப்பிக்க சிலர் முன்கூட்டியே பர்சேஸை முடித்தாலும், கடைசி நேரத்தில் ரெடிமேட் ஆடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. தீபாவளி பர்சேஸ் என்றாலே அது தியாகராயநகர் தான் என்று நினைப்பவர்களுக்கு பெரிய வணிக நிறுவனங்கள் புறநகர்களில் திறந்த கிளைக்கடைகள் சற்று ஆறுதலாக அமைந்தன.
சிறுவியாபாரிகள் கவலை
எனினும் ரங்கநாதன் தெருவில் சிறிய அளவிலான ரெடிமேட், கடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டைப் போல மக்கள் கூட்டம் இல்லாததால் வியாபாரம் மந்தமாக உள்ளது என்பதே அவர்களின் கவலைக்குக் காரணம்.
தி. நகரில் மக்கள் கூட்டம்
அண்மைக் காலமாக தி நகர் மட்டுமின்றி புரசைவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் புத்தாடைகள் வாங்க செல்வதால் கைகூட நுழைய முடியாத அளவில் நெருக்கியடித்து செய்யும் ஷாப்பிங்கெல்லாம் இப்போது இல்லை. குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள் சென்றுவிட்ட நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள் கடைசி நேர ஷாப்பிங்கில் இறங்கியுள்ளனர்.
பொதுவிடுமுறையால் ரிலாக்ஸ் ஷாப்பிங்
தியாகராய நகர், ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தலைகளாகவே காணப்படுகிறது. புத்தாடைகள், இனிப்பு, போனஸ் பணத்தில் நகைகள் வாங்க மக்கள் கடைசி நேர பரபரப்பில் இருக்கின்றனர். இன்று அரசு பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டதால் ஷாப்பிங் செய்ய சிலருக்கு வசதியாய் அமைந்துவிட்டது.
பட்டாசு விற்பனை சூடுபிடிக்கவில்லை
பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதால் பட்டாசு விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளன. எனினும் அதிக ஒலி எழுப்பும், மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கே கட்டுப்பாடுகள் வானில் வெடிக்கும் வண்ண மத்தாப்பு வெடிகளுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதால் அந்த வகை பட்டாசுகளை மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர். எனவே நாளை காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் வானம் வண்ண வண்ண ஒளிகளால் மின்னுவதை பார்க்கலாம்.