கலால் வரி சுமை கஸ்டமர் தலையில்.. தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு! இன்றைய ரேட் என்ன?
சென்னை: தொடர்ந்து 7வது நாளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்த கூடுதல் கலால் வரியை வாடிக்கையாளர்கள் தலையில் எண்ணை நிறுவனங்கள் சுமத்துவதே விலை உயர்வுக்கு காரணம்.
Recommended Video
சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 40 டாலருக்கும் கீழே சரிந்துள்ளன. ஆனால் இந்தியாவில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை விகிதங்கள் நான்கரை மாதம் இல்லாத அளவுக்கு உயர்வில் உள்ளன.
கடந்த மாதம், கலால் வரியை மத்திய அரசு கிடுகிடுவென உயர்த்தியது. பெட்ரோல் மீது லிட்டருக்கு 10 ரூபாய், மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வின் தாக்கம் நுகர்வோருக்கு இருக்காது, இது எண்ணை நிறுவனங்களுக்குத்தான் என அப்போது அரசு கூறியிருந்தது. ஆனால் யதார்த்த நிலை அப்படியில்லை. எண்ணை நிறுவனங்கள், விலை உயர்வு சுமையை, மக்கள் மீது சுமத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
இந்த நிலையில்தான், தொடர்ந்து 7வது நாளாக இன்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 52 காசு உயர்த்தப்பட்டு, ரூ.78.99க்கு விற்பனையாகிறது. டீசல் 50 பைசா உயர்ந்து ரூ.71.64க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே ஊரடங்கால் வெளியே வர அச்சப்படும் மக்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வண்டி சாவியை தொடக்கூட பயப்படுகிறார்கள். மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாத இந்த காலகட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவர்களுக்கு கிலியூட்டுகிறது.