இரவில் காரில் சென்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் போலீசார் தகராறு.. சமாதானம் செய்த துணை கமிஷனர்! பரபரப்பு
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் சூழல் விளக்கு காரில் சென்ற ஐஏஏஸ் அதிகாரியிடம் , யார் என்று தெரியாமல், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து துணை கமிஷ்னர் நேரில் வந்து விசாரணை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் தான் முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர்களின் வீடுகள் உள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை பார்க்க ஐஏஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி அந்த சாலையில் பயணிப்பது வழக்கம்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சுழல் விளக்கு பொருத்தப்பட்ட தனியார் கார் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி யாரும் சுழல் விளக்கு பயன்படுத்த கூடாது என்பதால், அந்த காரை வழிமறித்தாக கூறப்படுகிறதது.
எப்படி பயன்படுத்தலாம்
கார் நின்றவுடன் காவலர் ஒருவர் அருகே சென்றார். அப்போது காரில் இருந்த நபர் ‘முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபடலாமா' என்று ஆங்கிலத்தில் திட்டினாராம். இதனால் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர், காரில் இருந்த நபரிடம் நீங்கள் யார், சுழல் விளக்கை எப்படி பயன்படுத்தலாம், என கேட்டிருக்கிறார்
வாக்குவாதம்
அதற்கு அவர் முறையாக பதிலளிக்காததால், வாகன சோதனையில் இருந்த போலீசார் அனைவரும் காரில் வந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்களாம். மேலும் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில், மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்.
காரில் சென்றார்
அப்போது, காரில் வந்த நபர் முக்கியமான துறையின் உயர் ஐஏஎஸ் அதிகாரி என்று தெரியவந்தது. சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அந்த ஐஏஎஸ் அதிகாரி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார்..
பரபரப்பு
பின்னர், துணை கமிஷனர் ‘‘முதல்வர் மற்றும் அமைச்சர்களை பார்க்க ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் வந்து செல்வார்கள். யார் என்று கூட தெரியாமல் ஐஏஎஸ் அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்டது ஏன்,'' என்று வாகன சோதனையில் இருந்த போலீசாரை கண்டித்தாராம். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.