வேட்டியால் கள்ளக்காதலியின் கழுத்தை இறுக்கி கொலை.. புடவையில் தூக்கிட்டது போல் நாடகம் போட்டவர் கைது
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.
பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நேற்றிரவு மர்மமான முறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரியமேடு போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் மோகனா என்பது தெரியவந்தது. அவர் ரயில்வே துறையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமியுடன் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தனர். சாத்தாங்காடு பகுதி அருகே இருவரும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.
பின்னர் இருவரும் ஆட்டோவில் வந்து பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் வீராசாமி, தான் அணிந்திருந்த வேட்டியால் மோகனாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க மோகனாவே தற்கொலை செய்து கொண்டது போல் மின்விசிறியில் அவரது புடவையால் மோகனாவின் சடலத்தை தூக்கில் தொங்குவது போல் செட் அப் செய்து விட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து பெரியமேடு போலீஸார், வீராசாமியை கைது செய்தனர்.