சென்னையில் பகீர்.. ரூ.1000-க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு.. பார் மேலாளர், உதவியாளர் கைது
சென்னை: சென்னையில் ரூ.1000க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு வழங்கப்படும் என அறிவித்த பார் மேலாளர் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை முதல் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் ஆங்காங்கே கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனிடையே டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு நூதன பேனர் வைக்கப்பட்டுள்ளது.
பேனர் வைப்பு
அதில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுகுடிப்போருக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியன பரிசாக வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.
குலுக்கல் பெட்டி
இந்த பேனர் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் கூட்டம் கூட்டமாக குடிகாரர்கள் குழுமினர். மேலும் ரூ.1000-க்கு மேல் குடித்துவிட்டு தங்கள் பெயர், செல்போன், வீட்டு முகவரியை அங்கு வைக்கப்பட்ட குலுக்கல் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.
ரகளை
இதனிடையே பேனர் குறித்து ஜாம்பஜார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இந்த பேனரால் ஏராளமான கூட்டம் அந்த கடைக்கு வருவதோடு மூச்சு முட்ட குடித்துவிட்டு குடிகாரர்கள் ஆங்காங்கே விழுந்து கிடப்பது, ரகளையில் ஈடுபடுவதுமாக இருந்தனர்.
கைது
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சென்ற போலீஸார் பேனர் வைத்ததாக பார் மேலாளர் வின்சென்ட் ராஜ், பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல்
மேலும் இந்த கடை அதிமுக மாஜி கவுன்சிலர் முகமது அலி ஜின்னாவுடையது என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடையில் இருந்த பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், எல்இடி டிவி, குலுக்கல் பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.