பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படத்தை.. மொபைலில் பார்த்த சிபிஎம் சென்னை கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது!
தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்தாக இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கிடையே இந்த ஆவணப்படத்தைப் பார்த்த இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட 20 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு மிகப் பெரிய கலவரம் ஒன்று ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த போது குஜராத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் மோடி இருந்தார்.
இதனிடையே பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி, இந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜேஎன்யூவை தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலை.யில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்- பதற்றம்!
ஆவணப்படம்
"இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற பெயரில் இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது. இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இருப்பினும், இந்த ஆவணப்படம் குறிப்பிட்ட கருத்தைப் பிரசாரம் செய்யும் வகையில் இருப்பதாகவும் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவில் தடை
இதையடுத்து இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த ஆவணப்படத்தின் லிங்குகளை கொண்ட ட்வீட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டன. யூடியூப்பிலும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த தடை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
சென்னையில்
மேலும், பொதுவெளியிலும் இந்த தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தைத் திரையிட முயன்று வருகின்றனர். அதன்படி தலைநகர் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இந்த ஆவணப்படத்தைச் சென்னை அண்ணா நகர் அம்பேத்கர் சிலையின் கீழ் திரையிட முயன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து ஆவணப்படத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
மொபைலில் ஆவணப்படம்
மேலும், அம்பேத்கர் சிலை அருகே கூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இதில் சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் 21 வயதான பிரியதர்ஷினியும் கலந்து கொண்டார். அப்போது அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்தே மொபைலில் அவர்கள் சாலையில் ஆவணப்படத்தைப் பார்க்கத் தொடங்கினர்.
கைதாகி விடுதலை
இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மொபைலில் ஆவணப்படத்தைப் பார்த்த கவுன்சிலர் பிரியதர்ஷினி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உட்பட 20 பேரைக் கைது செய்தனர். உரிய அனுமதி பெற்ற பிறகு போராட்டத்தில் ஈடுபடுமாறு போலீசார் அவர்களை அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்துள்ளனர்.
நாடு முழுக்க
சில நாட்களுக்கு முன்பு டெல்லி ஜேஎன்யுவில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டனர். அப்போது அங்கு திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதையும் தாண்டி மாணவர்கள் தங்கள் மொபைலில் ஒன்றாக அமர்ந்து ஆவணப்படத்தைப் பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல் ஏறியும் சம்பவங்களிலும் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல வேறு சில கல்லூரிகளிலும் தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் திரையிடும் முயற்சிகள் நடந்துள்ளன.