"விக்ரம்" ஸ்டைலில்! திருமணத்தில் காத்திருந்த "ரவுடிகள்".. சச்சினை சுட்டு பிடித்த சென்னை போலீஸ்! பரபர
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி சச்சின் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ரவுடி சச்சினை கைது செய்துள்ளனர்.
மாமல்லப்புரத்தை சேர்ந்த ரவுடிகள் மேத்யூ மற்றும் சச்சின். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த லெனின், ஆலன்பாபு கும்பலுக்கும் மோதல் நிலவி வந்தது.
இந்த இரண்டு கும்பலும் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு சம்பவங்களில் இவர்கள் இரண்டு கும்பலுக்கும் இடையில் மோதல் வந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் பல்வேறு இடங்களில் கொடுமையான சண்டைகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
5 ஆண்டுகள் தடை- பிஎப்ஐ ஆபத்தான இயக்கம்..4 மாதங்களுக்கு முன்பு எச்சரித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !
கொலை
இப்படி நடந்த சண்டை ஒன்றில் லெனின் கும்பல் மேத்யூ ஏரியா புகுந்து தாக்கியது. சினிமாவில் காட்டுவது போல கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்து மாறி மாறி இவர்கள் சண்டை போட்டனர். இந்த சண்டையில் மேத்யூ - சச்சின் கும்பலை சேர்ந்த அபிஷேக் என்பவரை லெனின் கொலை செய்தார். இது அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லெனின் தம்பி ஆலனை கொலை செய்ய வேண்டும் என்று மேத்யூ - சச்சின்கும்பல் ரெடியாகி இருந்தது
சச்சின்
இந்த நிலையில்தான் சரியாக ஆலன் திருமணம் கடந்த வாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் புகுந்து ஆலனை கொலை செய்து விடுவோம் என்று ரவுடிகள் மூலம் மேத்யூ - சச்சின் கும்பல் சவால் விட்டது. திருமணத்தன்று உள்ளே புகுந்து மணப்பெண் முன் ஆலன் தலையை வெட்டுவோம். திருமண அரங்கின் நடுவில் அவரின் தலையை வைப்போம் என்று மேத்யூ - சச்சின் கும்பல் சவால் விட்டுள்ளது. இந்த தகவல் போலீசாருக்கு கசிந்தது.
தகவல்
இந்த தகவலின் அடிப்படையில் விக்ரம் படத்தில் வருவது போலவே போலீசார் மப்டியில் துப்பாக்கியுடன் சென்று அந்த திருமண அரங்கில் பாதுகாப்பு கொடுத்தனர். 50 போலீசார் அங்கு இருந்தனர். மேத்யூ - சச்சின் கும்பலும் அங்கே இருந்தது. விக்ரம் படத்தில் இண்டர்வெல்லில் வருவது போலவே பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. மேத்யூ - சச்சின் ஆகியோரை சுட்டு பிடிக்கவும் போலீஸ் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர்களின் ஆட்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்து இருந்தனர். மேத்யூ - சச்சின் ஆகியோர் வரவில்லை.
தடுப்பு
அதிக அளவில் போலீஸ் இருந்ததால், அன்று அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. திருமணத்தை உடனே முடித்துக்கொண்டு தம்பதிகளை போலீசார் காரில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து சச்சின் - மேத்யூ இருவரையும் போலீசார் தேடி வந்தனர். கடந்த இரண்டு வாரமாக இந்த கும்பல் தீவிரமாக தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் சச்சின் இருக்கும் இடம் இன்பார்மர்கள் மூலம் போலீசுக்கு கிடைத்து உள்ளது.
கைது
இதையடுத்து இன்று காலை ரவுடி சச்சின் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ரவுடி சச்சினை கைது செய்துள்ளனர். தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு பிடித்து கைது செய்தது போலீஸ். பூந்தண்டலம் பகுதியில் மறைந்து இருந்த சச்சின் கைது செய்யப்பட்டார். சச்சினை பிடிக்க முயன்றபோது கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. துப்பாக்கி சண்டை முடிவில் சச்சின் கைது செய்யப்பட்டார்.