போலீஸ் கமிஷனர் போட்ட சூப்பர் ட்விட்.. பாராட்டை அள்ளியது சென்னை போலீஸ்!
சென்னை: ரூ .1.20 கோடி மதிப்புள்ள 1196 மொபைல் போன்களை உரிமையாளர்களிடம் சென்னை போலீசார் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை கமிஷ்னர் மகேஷ் அகர்வால் போட்ட ட்விட் சமூக வலைதளங்களில் பாராட்டை அள்ளியுள்ளது.
சென்னை கொள்ளையர்களிடம் பறிகொடுத்த செல்போனை வாங்க முடியாத நிலை இருந்தது. இதேபோல் தொலைந்த செல்போனையும் பெற முடியாத நிலை இருந்தது. இதை மாற்றிக்காட்டியிருக்கிறது சென்னை போலீஸ்.
சென்னையில் ரயில்களில், பேருந்துகளில் செல்லும் போது திருடர்கள் செல்போனை அடித்து பிடுங்கி சென்றுவிடுவது அடிக்கடி நடக்கும். இதேபோல் ஓட்டல்களில் சாப்பிட செல்லும் போது மறந்து வைத்துவிட்டு வரும் செல்போன் அப்படியே மாயமாகிவிடுவதும் உண்டு.
வந்தவனும் சரியில்லை, வாச்சவனும் சரியில்லை.. வக்கிரம் பிடித்த 2வது கணவன்.. சென்னை பெண் கதியை பாருங்க
திருடி விற்கும் கும்பல்
ஆனால் செல்போன்கள் மாயமானால் அதை பற்றி போலீசில் புகார் அளிப்பது என்பது பெரிய அளவில் இருப்பதில்லை. இதை சாதகமாக எடுத்துக்கொண்டுதான் மொபைல் போன்களை திருடி அதை மறுவிற்பனையும் சிலர் கும்பலாக செய்வது உண்டு.
பொதுமக்களிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் சென்னை மாநகரத்தில் செல்போன்களை திருடும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் சென்னை போலீஸ், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ .1.20 கோடி மதிப்புள்ள 1196 மொபைல் போன்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
1.20கோடி மதிப்புள்ள செல்போன்
இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ் அகர்வால் போட்ட ட்விட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது ட்விட் பதில், ஆயிரக்கணக்கான மொபைல்கள் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதன் மேல் இவர், "இது ஒரு புதிய மாடல் மொபைல்களோ அல்லது மொபைல் ஷோரூம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டதோ அல்ல. ஏறக்குறைய ரூ .1.20 கோடி மதிப்புள்ள 1196 மொபைல் போன்கள் இவை. இதை பெரும்பாலும் தவறவிட்ட உரிமையாளர்களுக்கு நகர காவல்துறையினரால் திருப்பி கொடுக்கப்பட்டன எனறு கூறியுள்ளார்.
திருட்டை தடுக்க வேண்டும்
சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ் அகர்வால் போட்ட ட்விட் சமூக வலைதளங்களில் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. ஒருவர் தனது பதிவில், சார் கிரேட் ஜாப், தயவு செய்து இனி செல்போன் திருட்டை தடுக்க முயற்சி செய்யுங்கள் . ஏனெனில் பெண்கள் மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து தான் அதிகமாக செல்போன்கள் திருடர்களால் பறிக்கப்படுகிறது என்றார். இன்னொருவர் தனது ட்விட்டில் "ஒருமுறை செல்போன் பறிபோய்விட்டால் அது திரும்பப் பெறாது என்பது பொதுவான நம்பிக்கை அது தவறு என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.