வண்ணாரப்பேட்டை போராட்டம்.. பொதுமக்கள் அமைதி காக்க சென்னை கமிஷனர் வேண்டுகோள்
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் முஸ்லீம் அமைப்பினர் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தடியடியை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை கமிஷனர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண்பதை பற்றி சிந்திக்க வேண்டும். தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படாமல் அமைதி காக்க சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.